கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய
கோர தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட
தீவிரவாதிகளில் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மற்ற தீவிரவாதிகள்
அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மும்பை தாக்குதல் குற்றவாளியான அஜ்மல் கசாப்பிற்கு, மும்பை சிறப்பு நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தூக்குத் தண்டனை விதித்தது.
இந்த தண்டனையை கடந்த செப்டம்பர் மாதம் 29ம் தேதி உச்சநீதிமன்றம் உறுதி
செய்தது. இதனைத்தொடர்ந்து, தனது தண்டனையை குறைக்குமாறு கசாப், குடியரசுத்
தலைவருக்கு கருணை மனு அனுப்பியிருந்தான். இது குறித்து மத்திய உள்துறை
அமைச்சகத்தின் கருத்தை குடியரசுத்தலைவர் கோரியிருந்தார்.
அதனைத்தொடர்ந்து, கசாப்பின் கருணை மனுவை நிராகரிக்க உள்துறை அமைச்சகம்,
குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது. கசாப் கருணை மனுவை குடியரசுத்
தலைவர் பிரணப் முகர்ஜியும் கடந்த 8ம் தேதியே நிராகரித்ததாக மகாராஷ்டிரா
உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பட்டீல் தெரிவித்தார்.
இதனையடுத்து அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு புனே ஏர்வாடா
சிறையில் தூக்கிலிடப்பட்டதாக மகாராஷ்டிர மாநில அரசு உயர் அதிகாரி
தெரிவித்துள்ளார்.
-பசுமை நாயகன்