பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் சமீப காலமாக அதிகரித்து வரும்
நிலையில், அதை தடுப்பதற்கு கடும் சட்டங்களை இயற்ற வேண்டிய தேவை
அதிகரித்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க எடுக்கப்பட
நடவடிக்கைகள் என்ன? அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பலனளிக்குமா என்பது
போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
"எதிர்மறை விளைவுகளே ஏற்படும்" : ஆண்மை நீக்கம் செய்யப்பட்டவர் அதற்கு
பின் மிக மோசமான நபராக மாறுவார். பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்களை செய்ய
துவங்குவார். பெண்களை இன்னும் அதிமாக வெறுக்க தொடங்குவார். அவர்
சமூகத்திற்கே மிகப்பெரிய ஆபத்தாக விளங்குவார். அதைவிட ஆயுள்கால சிறை தண்டனை
வழங்குவது மிகவும் பாதுகாப்பானது என பெண்ணியவாதி கவிதா கருத்து
தெரிவித்துள்ளார்.
போற்றப்பட வேண்டிய பெண்ணினத்தை வெறும் போகப்பொருளாய் எண்ணுபவர்களால்
பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய
குற்றங்களுக்கு எதிராக மரண தண்டனை, ஆண்மை நீக்கம் உள்ளிட்ட கடும்
நடவடிக்கைகள் தேவை என்ற எண்ணமும் மக்களிடையே எழுந்து வருகிறது. ஆனால்
இதுபோன்ற தண்டனைகளால் எதிர்மறையான விளைவுகளே ஏற்படும் என்கின்றனர் சமூக
ஆர்வலர்கள்.
பாலியல் குற்றங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள்
குறித்த பரிந்துரைகளை வழங்க மத்திய அரசு 2 கமிஷன்களை அமைத்துள்ளது. ஆனால்
இவை ஆணாதிக்க மனோபாவம் உள்ள சமூக அமைப்பில் எதிர்பார்க்கும் பலன்களை
அளிக்குமா என்று சந்தேகம் எழுப்புகின்றனர் பெண்கள் அமைப்பினர்.
அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு
எதிராக போராடும் போர்க்குணத்தை மீட்டெடுக்க, பெண்கள் உறுதியேற்க வேண்டும்
என்று அழைப்பு விடுக்கின்றனர் பெண்ணியவாதிகள்.
நாட்டையே தாய்நாடு என்று பெண்ணின் பெருமையை பறைசாற்றும் நமது தேசத்தில்,
பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது வருந்தத்தக்கது. இந்த நிலையை
மாற்ற, தாயாக, தாரமாக, சகோதரியாக, தோழியாக கருதி, பெண்களை போற்றி
பாதுகாக்கும் எண்ணம் அனைவரின் மனதிலும் விதைக்கப்பட வேண்டும் என்பதே
பெண்கள் அமைப்பின் கோரிக்கையாக இருக்கிறது.
-பசுமை நாயகன்