வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு நாளையே தூக்கு
வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு நாளையே தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என கர்நாடகா மாநிலம் பெல்காமில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில்நிலக்கண்ணி வெடித்தாக்குதலில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி, வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் அவசர அவசரமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
நாளையே தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற அச்சத்தில் 4 பேரது உறவினர்களும் உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தனர்.
மேலும் மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் கோரியிருந்தனர். ஆனால் மனுவை விசாரித்த நீதிபதி உடனடியாக விசாரிக்க மறத்து விட்டது. மேலும் நாளையே தூக்கு நிறைவேற்றடுகிறது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என நீதிபதி அல்டமாஸ் கபீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிராகரிக்கப்பட்ட கருணை மனு: வீரப்பன் கூட்டாளிகள் மீசை மாதையன், ஞானபிரகாஷ், பிலவேந்திரன்,சைமன் ஆகிய 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக அளிக்கப்பட்ட கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி கடந்த 11-ம் தேதி நிராகரித்தார்.
இத்தகவலை உறுதிசெய்த கர்நாடகா சிறைத்துறை டி.ஜி.பி, கருணை மனு நிராகரிக்கப்பட்ட 4 பேருக்கும் 14 நாட்களில் தண்டனை நிறைவேற்றப்படும் என கடந்த 13ம் தேதியன்றே தெரிவித்தார்.
மேலும் 14 நாட்களுக்குள் தண்டனையை நிறைவேற்ற, தூக்கிற்கான தேதியை மாஜிஸ்திரேட் நிர்ணயிப்பார் எனவும் தெரிவித்திருந்தார்.
தற்போது கர்நாடகாவின் பெல்காம் சிறையில் உள்ள இந்த நான்கு பேரும் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட வீரப்பன் கூட்டாளிகள் மீதான வழக்கு விவரங்கள் பின்வருமாறு:-
1991-ஆம் ஆண்டு கர்நாடக பகுதியிலுள்ள காவல்நிலையத்தை வீரப்பன் கூட்டாளிகள் தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். 1993-ஆம் ஆண்டு பாலாறு பகுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் காவல்துறையினர் 22 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த இரு வழக்குகளில் தொடர்புடையதாக 100-க்கும் அதிகமானோரை கர்நாடக காவல்துறை கைது செய்தது. இதில் பிலவேந்திரன், ஞானபிரகாசம், சைமன், மீசை மாதையன் ஆகிய 4 பேருக்கும் மைசூர் தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவித்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வீரப்பன் கூட்டாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்தது குறைவானது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் பிலவேந்திரன், ஞானபிரகாசம், சைமன், மீசை மாதையன் ஆகிய 4 பேருக்கும் கடந்த 2004-ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 4 பேரும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
-பசுமை நாயகன்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
குரூப் 1 -க்கான முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 1 -க்கான முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெற்றது. உதவி மாவட்ட ஆட்சியர், உதவி காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர் உள்ளிட்ட 5 பதவிகளில் உள்ள 25 காலிப்பணியிடங்களுக்காக இந்த தேர்வு நடைபெற்றது.
33 தேர்வு மையங்களின் கீழ் 350 தேர்வுக்கூடங்களில் நடைபெற்ற இந்த தேர்வை ஒரு லட்சத்து 26 ஆயிரம்பேர் எழுதினர். கேள்வித்தாள்கள் மிகுந்த பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டதோடு, அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். முதல்நிலைத் தேர்வு மற்றும் முக்கியத் தேர்வுகளில் இந்தாண்டு அதிக மாற்றங்களை தேர்வாணையம் செய்துள்ளது.
இந்த மாற்றங்கள் கடினத் தன்மையை அதிகரிக்கும் என்று தேர்வு எழுதுபவர்கள் கருதினாலும், சிறந்த பணியாளர்களை தேர்வு செய்ய இந்த மாற்றங்கள் உதவும் என்று தேர்வாணையத்தின் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் அடுத்தகட்ட தேர்வான முக்கியத் தேர்வு வரும் மே மாதம் நடைபெறவுள்ளது.
************************************************************************
கர்நாடகாவுக்கு தமிழகம் வழியாக குழாய் மூலம் எரிவாயு
தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை
கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு தமிழகம் வழியாக குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்திற்கான ஆய்வுப் பணிகள், நாமக்கல் மாவட்டத்தில் இன்று தொடங்கின. திருச்செங்கோட்டை அடுத்துள்ள சொக்கராயன் பேட்டை, பாப்பம்பாளையம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள விவசாய நிலங்களில் இந்த ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எரிவாயு குழாய் திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் இடங்களில் உள்ள மரங்கள், பயிர்களை போன்றவற்றை கணக்கெடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. திருச்செங்கோடு தாசில்தார் சிவகுமரன் தலைமையில் வனத்துறையினர், வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களின் பாதுகாப்புக்காக ஐம்பதுக்கும் மேற்பட்ட காவல்துறையினரும் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், விவசாயிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். மத்திய அரசின் கெயில் நிறுவனத்தின் இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
-பசுமை நாயகன்